ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
நூல்
1
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்.
2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.
3
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது.
10
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
11
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல்.
12
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும்.
13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம்.
14
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி.
15
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்குஅறியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம்.
16
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
17
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு.
18
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்?
19
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன்.
20
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு.
21
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும்.
22
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை.
23
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம்.
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.
26
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
27
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
28
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று?
29
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம்.
30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக